Wednesday, June 17, 2009

உறுத்தல்


உறுத்தலும்
வலியும்
காலமாகிப் போன
கணவனின் முகமும்
தீண்டலின் தீவிரமும்
தீயாய் எரித்துக் கொண்டிருந்த
அவளை...

புணர்ச்சியின் முடிவில்
இவன் தரும்
பணத்தால்
பிள்ளைக்கு வாங்கும்
பால் அணைத்துக் கொண்டிருந்தது!

-செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

4 comments:

  1. இந்தக் கவிதை படித்ததும், வேசியின் பகல் என்ற தலைப்பில் எங்கோ எப்போதோ படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. அதன் வரிகள் நினைவில் இல்லை என்றாலும், சாரம் இதுதான் - வேசிக்கு பகலை விட இரவே பிடித்தமானதாக இருக்கிறது.

    உன்னுடைய கவிதை அளவில் சிறியதெனினும், உள்ளடக்கம் மிகப்பெரிது. என்னளவில் நான் புரிந்து கொண்டதை தெரியப் படுத்த நினைக்கிறேன்.

    \\உறுத்தலும்
    வலியும்\\

    பொதுவாகவே, வக்கிரமான எண்ணங்களுக்கு வடிகால் தேடித் தான் நிறைய பேர், இது போன்ற பெண்களிடம் செல்வார்கள். "உறுத்தலும்" என்ற பதம் அவளின் மன உறுத்தலையும், "வலியும்" என்ற வார்த்தை, அவளின் மீது இயங்கிக் கொண்டிருக்கும் வக்கிர மனதுக்காரனால் அவளுக்கு நேரும் வலியையும் குறிப்பதாகக் கொள்கிறேன்.

    \\காலமாகிப் போன
    கணவனின் முகமும்\\

    அவள் இந்தத் தொழிலுக்கு வந்ததன் காரணம் வெளிப்படுகிறது இவ்வாக்கியங்களில்.

    \\தீண்டலின் தீவிரமும்
    தீயாய் எரித்துக் கொண்டிருந்த
    அவளை..\\

    சுத்தமாய்ப் பிடிக்கவில்லை எனினும் அவள் அதில் ஈடுபடுகிறாள். ஏன்? அதற்கான காரணம் விளங்கி விடுகிறது இதற்குப் பின் வரும் வரிகளில்.

    மிகத் தரமான கவிதைகளுடன் இதையும் சேர்த்தே ஒப்பிடலாம். தவறே இல்லை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நன்றி சுந்தர், நீங்கள் புரிந்துக்கொண்டதை வைத்து நான் சரியாக வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளேன் என்பதை அறிந்து கொண்டேன்.


    காமமும் புணர்வுகளும் எத்தனை சுகம் தரக் கூடியதாக இருந்தாலும், உணர்வுகளின் வேறுபாட்டில் உறுத்தல்களாகவும் வலிகளாகவும் பாரமாகவும் மாறி விடுகிறது... இந்த சூழ்நிலையில் தள்ளபடுபவர்களுக்கு பாத்திரம் கழுவுதையோ, பூக்கூடை தலையில் தாங்கி தெருத்தெருவாய் அலைவதையோ, பிச்சை எடுப்பதையோ தவிர சொல்லிக்கொள்ளும்படி வேறு தொழில் இருப்பதாகத் தோன்றவில்லை ... மாறி வரும் சமுதாய சூழ்நிலைகளையும்.. கோடியில் புழங்கும் கல்வி நிலையங்களையும் பார்க்கையில், நான் பால் என்றிருந்தது புத்தகமாகவோ மருந்தாகவோ இன்னபிறவாகவோ மாறுகையில்... இவர்களும் "செய்யும் தொழிலே தெய்வம்" என்று சொன்னாலும் ஆட்சேபிக்க வார்த்தை இல்லை...

    விடியட்டும்! இவர்களுக்கும்!!

    ReplyDelete
  3. இந்த "உறுத்தல்" என்ற வார்த்தை மிகவும் யோசிக்க வைத்து விட்டது. உறுத்தல் இல்லாத மனிதன் உண்டா? ஒரு நாளாவது உறுத்தலின் சிறு நுனியாவது தீண்டாமல் கழிந்திருக்கிறதா? உறுத்தல்கள் மழுப்பப்படுவதால் தொடர்ந்து வாழ்கிறோம்.

    "கொன்றார் பாவம் தின்றால் போச்சு" என்பதைப் போல, கொல்வதன் உறுத்தல் மழுப்பப் படாவிடின், கோழியையும், ஆட்டையும் சாப்பிட முடியுமா நம்மால்...?

    செய்யும் தவறுகளின் உறுத்தல் தீ, தொடர்ந்து அணைக்கப் பட்டு விடுகிறது. வேசைத் தொழில் செய்யும் அவளின் உறுத்தல், அவள் குழந்தைக்கான பாலினால் அணைக்கப் பட்டுவிட்டதைப் போல. அவனவனுக்கு ஆயிரம் காரணங்கள் - தவறுகள் தொடர்ந்து நியாயப் படுத்தப் படுகின்றன. ஒவ்வொரு பிரச்சனைக்கும் பல பரிமாணங்கள். பல கோணங்கள். ஒரு கோணத்தில் சரியெனப் படுவது, மற்றொன்றில் தவறாகத் தோன்றும்.

    எனினும் காலம் இந்த எல்லா உறுத்தல்களோடும் , அவற்றுக்கான மழுப்பல்களோடும், உறுத்தல் இல்லாமல் உருண்டு கொண்டே இருக்கிறது.

    கவிதை அட்டகாசம். மனதை அசைத்துப் பார்க்கும் எந்தவொரு படைப்பும் மனதில் நின்று விடும், அந்த வகையில், இந்தக் கவிதை மறக்கவியலாத ஒன்றாகி விட்டது எனக்கு

    ReplyDelete
  4. இந்த உறுத்தலுக்கு மட்டும், இதுவரை உறுதியான உண்மையான உரை தெரியவில்லை . . .
    சதையாக மட்டுமே பார்க்கப்படும் சகமனிதர் தான் இந்த சதை மூலம் சவமாகப்போகும் சவத்திற்கு உயிரூட்டுபவர்கள், இந்த விளிம்பில் வாழ்பவர்கள் தான் வாங்கிய காசிற்கு வஞ்சனை செய்யாமல் வாழ்கிறார்கள், தங்களுக்கு நேரமிருப்பின் என் வலைப்பூவின் வார்த்தைகளை காண வருமாறு அழைக்கின்றேன் . . .

    ReplyDelete

Reactions