Saturday, October 17, 2009

கூண்டுக்கிளி






கீற்று.காமில் 20௦/10/2009 , வெளியான என் கவிதை: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=864:2009-10-19-06-46-18&catid=2:poems&Itemid=88 . நன்றி www .keetru .com.




சொல்வதைச்
சொல்லும் கிளி என்றதும்
எல்லோரும்
ஏதேதோ கூற
அதுவும்
திருப்பிக் கூறிக்கொண்டிருந்தது
பைத்தியமாய்...

என் திருப்பம் வர
அருகில் சென்றேன்
சக்கரநாற்காலியை நகர்த்திக்கொண்டே...
அழுகை வர
கிளியும்
அழ ஆரம்பித்திருந்தது!!


--செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

Thursday, October 15, 2009

கையசைப்பு

திண்ணை.காமில் வெளியான என் கவிதை, http://www.thinnai.com/?module=displaystory&story_id=309101512&format=html. நன்றி திண்ணை.காம்.





ஏதோ
யோசித்தபடியே
கசக்கிக் கொண்டிருந்த
கண்களின் இடுக்குகளில்
வந்து மறைந்து போனது
தன் பிஞ்சு கைகளை
அழகாய் அசைக்கும்
குழந்தை.


ரயில் வேகத்திலும்
யாரோ ஒருவரின் பதில்
கையசைப்பின் நிகழ்தகவிலும்
மீண்டும் விளையாட
திரும்பி இருப்பான் என்பதுமான
குழப்ப வெளியினூடே
மறைந்து போனது
என் பதில் கையசைப்பின்மையின்
உறுத்தல்கள்!


--செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

Saturday, October 10, 2009

சேரா துணை..

திண்ணை.காம் இல் வெளியான எனது கவிதை: http://www.thinnai.com/?module=displaystory&story_id=30910098&format=html நன்றி: http://www.thinnai.com/


முன்பு
மழை அடித்து
பெய்யும் போதெல்லாம்
எழுதி விடுவேன்
ஒரு கவிதை

மழைக்கா
எனக்கா
என்று
புரியாத போதிலும்

மூன்று வரிகள்
முடிந்திருக்கையில்
அடித்து சாத்துகிறாள்
கதவை

மூன்று வரிகளில்
முடிகிறது
என் கவிதை

மழையின் சத்தம்
மட்டும் காதுகளுக்குள்ளே...

இப்போதும்
மழை அடித்து
பெய்யும் போதெல்லாம்
எழுத முயல்கிறேன்
ஒரு கவிதை


--செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

Wednesday, October 7, 2009

வெந்தத தின்னுட்டு...

கீற்று இதழில் வெளியான என் கவிதை. நன்றி www .Keetru .com
கீற்று இதழில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.






வெந்தத தின்னுட்டு
விதி வந்தா சாவோம்னு
நொந்தவங்க கும்பல்ல
நானும் ஒருத்தன்

சொந்தம்னு சொல்லிக்கிட்டு
பொங்கலுக்கு வரும்
மவவயுத்து பேத்திக்கு
வெத்தலப் பொட்டில
சில்லற பொறுக்கும்
வெத்துத் தாத்தன்

மவ ஊருக்கு வரும்போதும்
தை மூணும்
ஆடு வெட்டி
ஆர்ப்பரித்து
அன்றே கடன் வாங்கும் பித்தன்

பஞ்சாயத்து ஏதும் வந்தா
பெருசக் கூப்பிடுனு ஊர் சொல்ல
பேர் வாங்கி என்ன செய்ய?

காச்சல்னு வந்தா
கம்பௌண்டர்ட்ட போக
காசு பார்த்ததில்ல...

பக்கத்து வீட்டு
பெரியாயி போட்டு தரும்
கசாயத்துல காச்சல் தீர - அப்பப்போ
எண்ணையோ பருப்போ நூறு வாங்க
கடைக்குப் போக அவ சொல்ல
முடியாதுன்னு சொல்லமுடியா ஓடுபையன்!

நெல் மூட்டை
வீட்டை அடைத்து
வாழ்ந்ததெல்லாம்
அப்பன் காலம்;
வெயில் எல்லாம் உள் நுகர்ந்து
வியக்குறு பவ்டெரில் இன்று
வயக்காசு முடிந்துபோகும்!

இருபத்தஞ்சு காசு
திருப்பிக் கேட்க
முறைச்சு பார்க்கும்
கண்டக்டர் முதல்
ராசா மிராசுதார் மருத்துவமனை
கௌண்டரில் சிடு சிடுக்கும்
மாத்திரை தருபவன் வரை
யாரையும் கோவிக்க முடியா
என் மனம்...

'வறுமைக்கு பிறந்தக் கூட்டம்
வையத்தை ஆளட்டும்னு'
பாட்டு கேக்கையிலே
சற்றே நகைத்து இளைப்பாறும்...
கையோடு
ரேசன் சர்க்கரையும்
வாங்கிக்கொண்டு வீடு போகும்

வெந்தத தின்னுட்டு
விதி வந்தா சாவோம்னு
நொந்தவங்க கும்பல்ல
நானும் ஒருத்தன்!

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

Monday, October 5, 2009

கடலை வண்டி




பங்காளிகள் பறித்துக்கொண்ட
பூர்விக சொத்து போனாலென்ன வந்தாலென்ன
பையனை வக்கீலாக்கனும்

பட்டணம் எல்லாம் பொழப்புக்குத் தான்
பொடி காசு சேத்தாயினும்
ஊர்ல ஒரு குழி நிலம் வாங்கனும்

இருபது ரூபா சீட்டு போட்டு
இந்த முறையேனும்
இளையவளுக்கு பொங்கலுக்கு புதுசு எடுக்கனும்

மழைக்கு ஓடி ஒதுங்க வழியில்ல
மாசம் பொறந்ததும் வண்டிக்கு
தார்பாய் மாட்டனும்

சொருவு கீத்து போட்டுனாலும்
பருவமழை
அடுப்படில பெய்யாம பார்த்துகனும்

உருண்டு கொண்டிருந்த
கடலை வண்டியின்
ரோதையினூடே
உருண்டு கொண்டிருந்தது
உருட்டியவனின் உள்ளமும்

பொழுது சாய்கையில்
விடியும் இவனுலகம்
விரைவில் விடிய
ஒரு பொட்டலம் வாங்கிச் சென்றேன்
கடலை பிடிக்காத போதிலும் ...

-செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி.