Wednesday, October 7, 2009

வெந்தத தின்னுட்டு...

கீற்று இதழில் வெளியான என் கவிதை. நன்றி www .Keetru .com
கீற்று இதழில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.






வெந்தத தின்னுட்டு
விதி வந்தா சாவோம்னு
நொந்தவங்க கும்பல்ல
நானும் ஒருத்தன்

சொந்தம்னு சொல்லிக்கிட்டு
பொங்கலுக்கு வரும்
மவவயுத்து பேத்திக்கு
வெத்தலப் பொட்டில
சில்லற பொறுக்கும்
வெத்துத் தாத்தன்

மவ ஊருக்கு வரும்போதும்
தை மூணும்
ஆடு வெட்டி
ஆர்ப்பரித்து
அன்றே கடன் வாங்கும் பித்தன்

பஞ்சாயத்து ஏதும் வந்தா
பெருசக் கூப்பிடுனு ஊர் சொல்ல
பேர் வாங்கி என்ன செய்ய?

காச்சல்னு வந்தா
கம்பௌண்டர்ட்ட போக
காசு பார்த்ததில்ல...

பக்கத்து வீட்டு
பெரியாயி போட்டு தரும்
கசாயத்துல காச்சல் தீர - அப்பப்போ
எண்ணையோ பருப்போ நூறு வாங்க
கடைக்குப் போக அவ சொல்ல
முடியாதுன்னு சொல்லமுடியா ஓடுபையன்!

நெல் மூட்டை
வீட்டை அடைத்து
வாழ்ந்ததெல்லாம்
அப்பன் காலம்;
வெயில் எல்லாம் உள் நுகர்ந்து
வியக்குறு பவ்டெரில் இன்று
வயக்காசு முடிந்துபோகும்!

இருபத்தஞ்சு காசு
திருப்பிக் கேட்க
முறைச்சு பார்க்கும்
கண்டக்டர் முதல்
ராசா மிராசுதார் மருத்துவமனை
கௌண்டரில் சிடு சிடுக்கும்
மாத்திரை தருபவன் வரை
யாரையும் கோவிக்க முடியா
என் மனம்...

'வறுமைக்கு பிறந்தக் கூட்டம்
வையத்தை ஆளட்டும்னு'
பாட்டு கேக்கையிலே
சற்றே நகைத்து இளைப்பாறும்...
கையோடு
ரேசன் சர்க்கரையும்
வாங்கிக்கொண்டு வீடு போகும்

வெந்தத தின்னுட்டு
விதி வந்தா சாவோம்னு
நொந்தவங்க கும்பல்ல
நானும் ஒருத்தன்!

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

10 comments:

  1. கீற்றுவில் நான் போட்ட பின்னூட்டம்:

    வெகு ஜன ஊடகங்கள் யாவும் குறைந்த எண்ணிக்கையிலான பெரிய மனிதர்களையே முன்னிலைப்படுத்தி வரும் இந்தக் காலத்தில், மிகப் பெரும் எண்ணிக்கையிலான இம்மாதிரி மனிதர்களையும் மனதில் வைத்தும் படைப்புகள் புனையப் படுவது, சிறு ஆறுதல். சிறு கூட்டத்திற்கு பெரிய விளம்பரம். பெரும் கூட்டத்திற்கு சிறிய அளவில் கவனப்படுத்தும் முயற்சிகள் - நம் சமுதாயத்தின் நகை முரண்.

    வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்தால் சாகும் மன நிலையில் தான் இங்கே நிறைய பேர் வாழ்கிறார்கள். மிகச் சிறிய அடிப்படைத் தேவைகள் கூட சரியாக நிறைவேறாமல், ஆனால் அதற்காக வாழ்வை வெறுத்து விடாத வெள்ளந்தி மனிதர்கள் எத்துணை பேர்... கிராமத்து வயக் காடுகளில் கணக்கெடுத்தால் தெரிய வரலாம்.

    செந்தில் கணேஷ் மிகக் கூர்மையாக கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பது இங்கே ருவாண்டாவில் வசிக்கும் தமிழர்கள் நாங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே (அவரது வலைப்பூவில் (http://cliffnabird.blogspot.com) அவரது அருமையான கவிதைகளை பார்க்கலாம்) . ஆனால், ஒரு சாதாரண மனிதனை முன் வைத்து அவன் பார்வையில், அவன் எதிர் கொள்ளும் சமுதாயத்தைத் தோலுரித்துக் காட்டும் வகையில் அமைந்த செந்திலின் இந்தக் கவிதை, உண்மையில் உலகத் தரம்.

    சாமான்யனை முன்னிறுத்தும் எந்தப் படைப்பும் உன்னதமானதே - வைரமுத்துவின் "கருவாச்சி காவியம்", ஜெயமோகனின் "ஏழாவது உலகம்" போல.

    அந்த வகையில் செந்திலின் இக்கவிதை மனதை விட்டகலாத ஒன்றாக மாறியதில் ஏதும் ஆச்சரியமில்லை.

    \\சற்றே நகைத்து இளைப்பாறும்...

    கையோடு

    ரேசன் சர்க்கரையும்

    வாங்கிக்கொண்டு வீடு போகும்\\

    சாட்டையடியாக சுளீரென்று யதார்த்தம் காட்டும் இவ்வரிகளில், நான் என்னுடைய கிராமத்துத் தாத்தாவைப் பார்த்தேன். இக்கவிதையை படைத்திட்ட செந்திலுக்கும், வெளியிட்ட கீற்றுவிற்கும் என்னுடைய நன்றிகள்.

    சுந்தர்

    ReplyDelete
  2. கண்ணீரை வரவழைக்கும் கனமான வரிகள். நல்ல கவிதை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. 'சுந்தர் பின்னூட்டத்திற்கு நன்றி!' என்று லேசாக கூறிவிட்டு ஓடமுடியாது.. உங்கள் பின்னூட்டங்களின் தன்மை அப்படி.. என் முதல் போஸ்ட் இல் இருந்தே கவிதை போஸ்ட் பண்ணின உடன் நான் முதலில் எதிர்பார்ப்பது உங்கள் வார்த்தைகள் தான்! பிழைகள் முதற்கொண்டு அனைத்தையும் சுட்டிக்காட்டி நான் வளர விரும்புபவர்!

    இந்தக் கவிதைகூட உங்கள் "நல்லவன்" கவிதைக்கு பதில் அளிக்கும் வண்ணம் எழுதியதுதான்.. ஒரே அலைவரிசையில் இருக்கும் நல்ல நண்பர்கள் சூழ்ந்திருக்கையில் நாமும் எதாவது அவர்களைபோல் செய்ய வேண்டும் என்றெண்ணுவது இயல்பு தானே..? ப்லோக் நீங்கள் ஓபன் செய்தபின் தான் BLOG பக்கம் ஈர்ப்பு வந்தது, கீற்றில் ஒரு நூறு பேர் என் கவிதை படிபபார்களாயின் அதை சாத்தியப்படுத்தியதில் உங்கள் பங்கு அளவிடற்கரியது!! மிக்க நன்றி சுந்தர்!!

    //
    Madhavi Sundar said...
    கண்ணீரை வரவழைக்கும் கனமான வரிகள். நல்ல கவிதை. வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி மாதவி சுந்தர், உங்கள் பின்னூட்டுங்கள் உற்சாகப்படுத்துகின்றன! தொடர்ந்து விமர்சிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  4. // ராசா மிராசுதார் மருத்துவமனை
    கௌண்டரில் சிடு சிடுக்கும்
    மாத்திரை தருபவன் வரை
    யாரையும் கோவிக்க முடியா
    என் மனம்...///

    வறுமை கலந்த முதுமை இந்த சமுதாயத்தில் மதிப்பற்றதாயிருக்கிறது ....
    இளமையில் வறுமை எவ்வளவு கொடியதோ அதை விட கொடியது முதுமையில் வறுமை.....
    இயலாமை எப்பொழுதும் ...... கோபம் முதற்கொண்ட அத்தனை காரசாரமான உணர்வுகளையும் காணாமல் அடித்து விடுகிறது....
    எங்கள் ஊர் அரசு மருத்துவமனையில் எத்தனையோ முறை இதை கண்டிருக்கிறேன்... ...அங்குள்ள ஊழியர்களின் வசவுகளை சகித்து கொண்டு தான் தங்களுக்கான வைத்தியத்தை பார்க்க வேண்டியதுள்ளது.... அரசு மருத்துவமனையை நம்பித்தான் ஆயிமாயிரம் குழந்தைகள் பிறக்கின்றன .... ஆயிரமாயிரம் பேருக்கு வயதாகிறது...

    முதுமையில் தனிமையும் புறக்கணிப்பும் பற்றி
    ஸ்டெல்லா புருஸ் தனது அறை நண்பன் தொடரில் சொன்னதை விட , மிகவும் உணர்ச்சிகரமாக இங்கே கவிக்க பட்டுள்ளது...

    இதை விட யாரும் இவ்வளவு உணர்வுபூர்வமாக சொல்ல முடியாது முதுமையின் தனிமையையும் ஆதரவின்மையையும் ......

    செந்தில் கணேஷ் என்ற புது முகத்திற்கு வாழ்த்துக்கள் ஆயிரம்...பெயரை போன்றே வித்தியாசமான இதே போன்று நல்ல படைப்புகளை என்றும் தரவேண்டும் என்பது இந்த சாதாரண வாசகனின் எதிர்பார்ப்பு....

    --Shankar Premchandran

    ReplyDelete
  5. \\\\
    வெந்தத தின்னுட்டு
    விதி வந்தா சாவோம்னு
    நொந்தவங்க கும்பல்ல
    நானும் ஒருத்தன்......\\\\

    - ஒரு இயலாமை மனிதனின் ஊனர்ச்சிகள்-சோகங்கள் எதார்த்தமாய் வரும் கவிதை இது.ஆரம்பமே கண்நீரை வரவழைக்கும் அருமையன வரிகள் மூலம்..... இந்த சிறு பறவை கட்டிய கூடு தனித்துவமானது என்று புரியவைத்துவிட்டார்.....
    \\\\
    சொந்தம்னு சொல்லிக்கிட்டு
    பொங்கலுக்கு வரும்
    மவவயுத்து பேத்திக்கு
    வெத்தலப் பொட்டில
    சில்லற பொறுக்கும்
    வெத்துத் தாத்தன்......\\\\\

    உலகம் காசை வைத்துதான் எடை போடும் என்பதை புரிந்து கொண்டு(சொந்தம் உள்பட ) "சில்லற பொறுக்கும்
    வெத்துத் தாத்தன்" என்ற வரிகள் கண்டிப்பாய் மனதை சுடும் ....

    \\\\மவ ஊருக்கு வரும்போதும்
    தை மூணும்
    ஆடு வெட்டி
    ஆர்ப்பரித்து
    அன்றே கடன் வாங்கும் பித்தன்

    பஞ்சாயத்து ஏதும் வந்தா
    பெருசக் கூப்பிடுனு ஊர் சொல்ல
    பேர் வாங்கி என்ன செய்ய?

    காச்சல்னு வந்தா
    கம்பௌண்டர்ட்ட போக
    காசு பார்த்ததில்ல...\\\\

    தன் சொந்த -பந்த மகிழ்ச்சிதான் பெரிது - என கடன் வாங்கும் தாத்தன்னுக்கு காச்சல்னு வந்தா ......காசு சேர்த்து வைக்காத - கிழவனின் வலி ....நம் மனதை குத்துகின்றன .....
    \\\\
    நெல் மூட்டை
    வீட்டை அடைத்து
    வாழ்ந்ததெல்லாம்
    அப்பன் காலம்;
    வெயில் எல்லாம் உள் நுகர்ந்து
    வியக்குறு பவ்டெரில் இன்று
    வயக்காசு முடிந்துபோகும்!\\\\\

    ஆழ்ந்து சிந்தனை செய்த உண்மை வரிகள்.....பாராட்டுகள் ....

    Shankar பிரேமச்சந்திரன் மற்றும் சுந்தரின் பின்னோட்டம்களை முற்றிலும் வழிமொழிகிரேன் ........




    உண்மையின் மைந்தன்

    ReplyDelete
  6. விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி உண்மையின் மைந்தன்!!

    ReplyDelete
  7. என்னமோ நான் தான் அந்த கிழவன் போல, கவிதை போன வளி எல்லாம் போய் வந்தேன்.

    /'வறுமைக்கு பிறந்தக் கூட்டம்
    வையத்தை ஆளட்டும்னு'
    பாட்டு கேக்கையிலே
    /

    நானும் சிறிது நகைத்து இளைபறி வந்தேன்.

    ReplyDelete
  8. மிக்க நன்றி அசோக், உங்கள் பின்னூட்டுங்கள் உற்சாகப்படுத்துகின்றன!

    ReplyDelete
  9. That was a niceone!!
    Happy that vanagamudi found u.. or else he would be still with hairs!!

    ReplyDelete
  10. KALAPIRAN Comment in Keetru:

    KALAPIRAN:
    நல்ல கவிதை என்றேனும் ஒரு நாள் நீயும் நானும் தனித்து பேசும் விவாதங்களில் வரும் கதாபத்திரங்கள் நிறம்பி வழியும் இது நல்ல கவிதை

    ReplyDelete

Reactions