Tuesday, May 10, 2011

என் மதுவை எவனோ அருந்தியிருக்கிறான்

நன்றி கீற்று.காம். கீற்று தளத்தில் படிக்க Click Here


என் மதுவை எவனோ அருந்தியிருக்கிறான்.

கோப்பையில் குறைந்திருக்கிறது .

என் மதுவை எவனோ அருந்தியிருக்கிறான்.


நான் குனிந்தபோதோ
கோப்பையல்லாத வேறெதின் மீதோ - பார்வை
குவிந்த போதோ

எவனோ எடுத்திருக்க வேண்டுமதை.

என் மதுவை எவனோ அருந்தியிருக்கிறான் .

கோப்பைக்கு ஆயிரமாயிரம் நாக்குகள்
ஆயினும்
உண்மை விளம்பவியலா ஜடப்பொருளது.

கூட்டத்தை நோக்கிய என் பார்வை
சற்றே வித்தியாசமாகிப்போனது

என் கோப்பையை கடந்தவன்
என்ற காரணத்தாலே
கொலை குற்றவாளியானார்கள்
எல்லோரும்.

குறைந்திருந்த மதுவின் அளவால்
உலகை அளக்க எத்தனிக்கிறேன்.

எச்சிலால் பரவும் வியாதிகளின்
அட்டவணை மனதுக்குள்ளே .

மதுவின்,
கோப்பைகளின்,
கூட்டங்களின்,
குதூகலம் குறைந்து கொண்டே போனதெனக்கு..

என் மதுவை எவனோ அருந்தியிருக்கிறான்.

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி



1 comment:

  1. Sundar In Keetru:

    மீண்டும் ஒரு சிறந்த படைப்பு. என்னையும் மீறி எங்கெங்கோ சுற்றியலைந்தன என் எண்ணங்கள். ஒரு படைப்பு, அது படைக்கப் பட்டவுடன் அதன் ஆசிரியனை இழந்து விடுகிறது. படிக்கும் ஒவ்வொருவனது அப்போதைய மனநிலை, படைப்பை எப்படி உள்வாங்கிக் கொள்கிறதோ, அப்படி அமைகிறது அதன் சாரம். இவ்விலக்கணத்தின் படி அல்லாமல், நேரடி அர்த்தத்துடன் அமைந்த Linear writings - பெரும்பான்மையான வேறு வகை. செந்தில்கணேஷ், நேரடிக் கவிதைகளையே அதிகம் எழுதி வந்தவர் என்றாலும், வாசகனுக்கு படைப்பில் இடம் (Space) வழங்கும், இந்தக் கவிதையின் வாயிலாக தன் படைப்புத் தளம் விசாலமானது என்று உணர்த்தியிருக்கிறார். பல முறை வாசித்தேன். ஒவ்வொரு முறையும் கால, நேர இடைவெளியின்றி, எங்கெங்கோ சுற்றியலைந்தேன். இங்கே, மது, மதுக்கோப்பை குறியீடுகளாக அருமையாக பொருந்திப் போயிருக்கின்றன. Hats Off SSG...
    - G.V.Sundar

    ReplyDelete

Reactions